Tuesday, 23 December 2014

இதுவல்லவா வாழக்கை
.
.
.
எங்கிருந்த போதிலுமே
நமை விடாத நினைவு
எது வந்த போதிலுமே
முடியாது சில கனவு

எதிர்பாரா நேரத்தில்
மாறிவிடும் வாழ்வு
மற்றவர் பார்வைக்கு
எல்லாமே ஒரு நிகழ்வு

வலை போட்டு மீன் பிடிப்பவன்
பேரலைக்கு பயந்தால் உணவில்லை
கலைபடைக்க தினம் நினைப்பவன்
ஓரிடத்தில் இருந்தால் பயனில்லை

அன்பிலாத இடத்தில்
அடைக்கலம் கேட்போம்
அறவனைக்க வருவோரை
ஏனோ தள்ளி வைப்போம்

கவலை இல்லா மனிதனில்லை
கவலை கொள்ளாதவன் மனிதனே இல்லை
உலகின் பிரச்சனைகளின் எண்ணிக்கையை
கோவில்களின் அர்ச்சனையே சொல்லிவிடும்

எவரும் தொலைக்காத நிம்மதியை
இன்னும் நாம் தேடுகிறோம்
தேவையென வரும்போதே
சில சொந்தங்களை நாடுகிறோம்

பரபாப்பான வாழ்க்கையில்
வலியை நினைக்ககூட வலியில்லை
இணையதள உலகத்தில் – அருகில்
இணைந்திருக்கும்
உயிரை மதிக்க நேரமில்லை

இருக்கும் போது
வாரா சொந்தம்
இல்லாத போது
வந்து என்ன பயன்

விட்டு போன உறவுகளுக்கு
விலை போட முடியாது
செத்து போன உயிர்களுக்கெல்லாம்
நாம் அழும் சத்தம் கேட்காது..

சோர்வதில் இல்லை வாழ்க்கை
சேர்வதில் உண்டு வாழ்க்கை

தொலைவதில் இல்லை வாழ்க்கை
தேடி அலைவதில் உண்டு வாழ்க்கை

இழந்ததில் இல்லை வாழ்க்கை
மீண்டு எழுவதில் உள்ளதே வாழ்க்கை ..

இன்னிசையை படைத்தான்
காதுகளுக்கு அமுதூட்ட ;
இயற்க்கையை படைத்தான்
கண் இரண்டை குளிர வைக்க  ;
நறுமணங்களை படைத்தான்
நாசிகள் நானேர ;
சுவைதன்னை படைத்தான்
உதடுகள் ருசித்துப்போக ;
எண்ணங்களை படைத்தான்
நினைவுகள் வந்துபோக ;
வண்ணங்களை படைத்தான்
அழகு முழுமையடைய ;
வலிகளை படைத்தான்
கண்ணீரை அறிந்துகொள்ள
மகிழ்ச்சியை படைத்தான்
சிரிப்புகள் சிதரிப்போக ;
உறவுகளை படைத்தான்
என்றென்றும் இணைந்து வாழ ;
பிரிவுகளை படைத்தான்
உணர்வுகள் உயிர்த்தெழ ;
பிறப்புகளை படைத்தான்
புது சொந்தங்கள் கண்டெடுக்க ;
இறப்புகளை படைத்தான்
எதுவும் நிலையில்லை என்றுரைக்க !!!

இதில் ஏதும் இல்லை செயற்க்கை
இதுவல்லவா வாழக்கை J J J

--- சௌந்தர்யா ---



என் உயிரே நியன்றி
ஏதும் இங்கு பெரிதில்லை
என் உலகம் நீ என்பேன்
வேறெதுவும் அடங்கவில்லை

உனை நினைக்கும் நிமடத்தில்
எனை மறந்து நான் போவேன்
உனை நினைக்கா நேரத்தில்
எப்படி இங்கு நான் வாழ்வேன்

விளக்கமுடியா அன்பு இது
விலகமுடியா நட்பு இது
விடியலன்றி போனாலும்- உன்
விழிகளே எனக்கு ஒளியாகும்

ஒட்டி பிறக்கவில்லை
இருந்தும்
உனை பிரிந்து
இருக்க முடியவில்லை ;

சங்கீதங்கள் வேண்டாம் எனக்கு
உன் சிரிப்பொன்றே கீதமாகும்
சொந்தம் பல வேண்டாம் எனக்கு
உன் உறவொன்றே வேதமாகும்

கேட்காமல் வந்த வரமே
இங்கு
கிறுக்கியதெல்லாம் உனக்கு
பகல் நேர நிலவே
உன்மேல்
பைத்தியமடி எனக்கு !

உன்னோடு என் வாழ்வு
எனக்கு கிடைத்த மோட்சமடி
நான் வாழும் நல்வாழ்வு
நீ போட்ட பிச்சையடி


நீ துக்கம் என சொன்னால்
தூக்கங்கள் தூரமாகும்
அழகுரதி நீ அழுதால்
அனைத்தும் ஒரு பாரமாகும்


கண்ணீரை சிந்தாதே
கனமாகுது இதயங்கள்
கவலையென வருந்தாதே
மாற்றிவிடும் வரும் காலங்கள்

தூரமாக நீ போனால்
துயரம் அது - நான்
தூக்கிபோட்ட கவிதைக்கு
தூது இது !


தவறுகள் ஒன்றல்ல
ஓராயிரம் செய்ததுண்டு
மன்னிப்பு ஆயிரம் அல்ல
பல்லாயிரம் கொடுத்ததுண்டு

காதல் மட்டும் போதும்
அன்பே
காயங்கள் வேண்டாம்
பிரியங்கள் மட்டும் போதும்
அழகே
பிரிய வேண்டாம் ..



 வாழும் போதே சொர்க்கங்கள்
உன் உறவில் இன்று கிடைத்ததம்மா
பத்து ஜென்ம சந்தோஷத்தை
உன் ஓர் உயிரே எனக்கு கொடுத்ததம்மா ..


                                                --சௌந்தர்யா--
                               



Saturday, 8 November 2014





















பேசாமல் போகின்றாய்
மௌனத்தின் வலி அறிந்தேன்
பாராமல் ஏன் சென்றாய்
பார்க்கும் விழியை வெறுக்கின்றேன்

கிடைக்காதா மறுபடியும்
உன்னோடு உறவிங்கு
கிடைக்காதா மறுபடியும்
உன்போன்ற உறவெங்கு

கோபங்கள் உனக்கென்றால்
சத்தம் போட்டு திட்டிவிடு
கஷ்டங்கள் உனக்கென்றால்
என்னிடமே நீ கொட்டிவிடு

தூரத்தின் சுமை அறிந்தேன்
நீ விலகி செல்லும்போதே
பாரத்தில் நான் கறைந்தேன்
நீ என்னை வெறுக்கும்போதே

தேடிக்கிடைக்கும் சுகம்தன்னை
தேடாமல் தந்தவன் நீ
ஒதுக்கிவைக்கும்  சுமைதன்னை
கேட்காமல் ஏன்தந்தாய் நீ

சொந்தத்தின் அருமைதனை
உன் அருகாமை தந்ததன்று
சொர்க்கத்தின் வாசல்தனை
உன் அறவணைப்பே சொன்னதுண்டு

எத்திசைகள் இருந்தென்ன
உன் திசையை நான் அறியேன்
எத்தனை பேர் இருந்தென்ன
உன் அசைவை நான் மறவேன்

காலங்கள் ஓடினாலும்
வேண்டிடுவேன் உன் அன்பிற்க்கு
காயங்கள் கூடினாலும்
காத்திருப்பேன் உன் மடிக்கு !!

                     ---சௌந்தர்யா---





















அடிகள் இல்லா வலிகள் இது
அவனுக்கான கவிதை இது
.
.
.
எங்கெங்கே தேடுவது
எப்பொழுது நீ வருவாய்
மனம் ஏங்கி அலைகிறது
அதை என்று நீ அறிவாய்

தொலைபேசி அடிக்கையிலே
உன் அழைபென்றே ஓடுகிறேன்
நீ அன்றி போகையிலே
உனை எண்ணித்தவிக்கின்றேன்

கவிதை வார்க்க வேண்டும் - கண்ணா
ஒருமுறை வந்து பார்த்துவிடு
கவலை குறைய வேண்டும் – அன்பே
ஒருமுறை நின்று பேசிவிடு

உறைந்து கிடக்கும் உள்மனதில்
உருகி வழிகிறாய் நீ
உளர்ந்து கிடக்கும் என் மனவானில்
அடிக்கடி உதயமாகிறாய் நீ !!

ஏக்கம் கொண்ட எனதுள்ளம்
ஏற்றம் கொள்ள வழியில்லையா
தாக்கம் கண்ட என்னையிங்கு
தாங்கிபிடிக்க ஆள் இல்லையா


எத்தனை நாள் ஆனாலும்
எங்கே நான் சென்றாலும்
இன்னும் நினைவில்
முத்தமிட்டுத்தான் போகிறது
முறிந்துபோன அந்த முதல் காதல் !!!


---சௌந்தர்யா---



Friday, 7 November 2014




















பளிச்சென முகம்காட்டி புன்னகைப்பாள்
வெளிச்சம் கொடுத்து தனித்திருப்பாள்

வட்ட முகம் அவளுக்கு
வர்ணம் இல்லை அவளுக்கு
வெண்மைதான் என்றென்றும்
பெண்மை இல்லை ஆனாலும்
மென்மை மட்டும் கலையாத – நம்
கண்ணை எல்லாம் திரும்பி பார்க்க செய்யும்
திகட்டாது தித்திக்கும்
திங்கள் நிலவு அவள் !!!


                  சௌந்தர்யா

Wednesday, 5 November 2014

உலகில் அடிமைகள் யாரும் இல்லை
இருந்தும்
எதற்க்கோ அடிமையாகிப்போகாதவரும் இல்லை
அப்படித்தான்
கவிதைக்கு அடிமையாகிப்போனேன் நான் !!!

சிந்தித்திருக்கலாம் சிலர்
எப்படி எழுதுகிறாள் என்று
சிந்தித்திருக்கலாம் சிலர்
எழுதுவதே என் வேலையோ என்று

வேண்டாமென்று ஒதுக்குவதில்லை
வேண்டுமென்றே யோசிப்பதில்லை
தானாய் வந்து விழுகிறது – எழுதாது
போனால் மனம் அழுகிறது

புன்னகையை எழுதிவைத்தேன்
பாராட்டுக்கள் வந்த வண்ணம்
அழுகையை எழுதிவைத்தேன்
ஆறுதல் தந்ததுள்ளம்

வண்ணங்கள் கொடுக்கும் அழகை
வார்த்தையிலே கொடுக்க நினைத்தேன்
வானவில் தரும் நிறத்தை
எழுத்துக்குள் அடக்க நினைத்தேன்

எழுத முற்படும்போதெல்லாம்
தோன்றாத அற்புதக்கவிதை
எதார்த்தமாய் கொட்டிப்போகிறது
என்றாவது ஒரு நாள் !

எழுதுங்கள் கவிதைகளை
மனம் சிரிக்கும் போதெல்லாம்
எழுதுங்கள் கவிதைகளை
மனம் அழுகும் போதெல்லாம்
எழுதுங்கள் கவிதைகளை
உறவு வரும் போதெல்லாம்
எழுதுங்கள் கவிதைகளை
உனை ஒதுக்கும் போதெல்லாம்

சந்தோஷத்தில் தானாய் கிடைக்கும்
சில்லென்ற சிரிப்பின்அலை
அழுகையில் மட்டுமே பிறக்கும்
மிகச்சிறந்த  கவிதைமழை ! ! !

--- சௌந்தர்யா ---